Search This Blog

Wednesday, 14 February 2018

சர்ஜிகல் ஸ்டிரைக் கூடாது: பாகிஸ்தான் அலறல்

புதுடில்லி: 'இந்தியா எந்த தாக்குதலை நடத்தினாலும், அதற்கு தகுந்த விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும்' என, எச்சரித்துள்ள பாகிஸ்தான், 'சர்ஜிகல் ஸ்டிரைக்' எனப்படும் அதிரடி தாக்குதலில் ஈடுபடக் கூடாது என்றும் கூறியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சுன்ஜூவானில் உள்ள ராணுவ முகாமுக்குள் நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள், சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இதில், ஐந்து ராணுவ வீரர்கள் உள்பட, ஆறு பேர் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த, 10 பேர் காயம்அடைந்தனர்.

சரியான விலை :

இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'நம் எச்சரிக்கைகளை மீறி, பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. 'இந்த தாக்குதலுக்கு சரியான விலையை பாகிஸ்தான் கொடுக்க வேண்டியிருக்கும்' என, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து, பாகிஸ்தான் ராணுவ அமைச்சர், குர்ராம் தஸ்தகீர் கான், நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:எங்கள் எல்லையை நாங்கள் பாதுகாப்போம். இந்தியா எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும். ஆத்திரப்படுவதை நிறுத்த வேண்டும்.

நிறுத்த வேண்டும் :

எந்த ஆதாரமும் இல்லாமல் எங்கள் மீது குற்றஞ்சாட்டுவதை நிறுத்த வேண்டும். உளவு பார்ப்பதற்கு ஆட்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும்.எல்லையைத் தாண்டி வந்து, 'சர்ஜிகல் ஸ்டிரைக்' போன்ற அதிரடி நடவடிக்கைகள் எடுப்பதை இந்தியா தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment