Search This Blog

Wednesday, 31 January 2018

இன்று அபூர்வ சந்திர கிரஹணம்: வெறும் கண்களால் பார்த்து மகிழலாம்

'இன்று நடக்க உள்ள சந்திர கிரஹணம், 152 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அரிய நிகழ்வு; இதை, வெறும் கண்களால் பார்க்கலாம்' என, அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.
பூமிக்கும், நிலவுக்கும் இடையேயான தொலைவு, கிட்டத்தட்ட, 3.84 லட்சம் கி.மீ., பூமியின் ஒரு பக்கம் சூரியனும், மறுபக்கம் சந்திரனும், ஒரே நேர் கோட்டில் வரும் நிகழ்வுகள், ஆண்டுக்கு ஒரு முறையேனும் நடக்கும். அப்போது, 'சூப்பர் மூன்' உருவாகிறது. அது, சாதாரணமாக தெரியும் நிலவை விட, 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் இருக்கும்.

2வது முழு நிலவு:

'தானாக ஒளியை வெளியிடும் சக்தி, நிலவுக்குக் கிடையாது; தன் மீது விழும் சூரிய ஒளியைத்தான், அது பிரதிபலிக்கிறது. சந்திர கிரகணம் என்பது, சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே, பூமி வரும் போது ஏற்படுகிறது. இதனால், சூரியன் - பூமி - நிலவு ஆகியவை நேர் கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி, நிலவின் மீது படாத நிலை ஏற்படுகிறது. இதை தான், சந்திர கிரகண நிகழ்வு என்கிறோம்.

இது குறித்து, தமிழக அறிவியல் தொழில் நுட்ப மைய இணை இயக்குனர், சந்திரராஜன் கூறியதாவது:ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவு, 'புளு மூன்' என, அழைக்கப்படுகிறது. அபூர்வமாக இந்த நிகழ்வு ஏற்படுவதால், இப்படி அழைக்கப்படுகிறது. நிலவு நீல நிறத்தில் தெரியும் எனக் கருத வேண்டாம்; அப்படி இருக்காது. விண்வெளியில் உள்ள மாசை பொறுத்து, இன்று சந்திரன் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படலாம். இந்த அபூர்வ சந்திரகிரஹணம், 152 ஆண்டுகளுக்குப்பின் இன்று நடக்கிறது. இது, உலக அளவில், வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தெரியும். இந்தியாவில், இன்று மாலை, 5:15 மணிக்கு சந்திர கிரகணம் துவங்குகிறது.

சிறப்பு ஏற்பாடு :

ஆனால், சென்னையில், சந்திரன் மாலை, 6:05 மணிக்கு உதிக்கும். மாலை, 6:22 முதல், இரவு, 7:38 வரை முழு கிரகணம் இருக்கும். இரவு, 7:39 மணி முதல், நிழல் விலக ஆரம்பித்து, 8:43 மணிக்கு முழுமையாக விலகி விடும். இரவு, 9:38 மணிக்குப்பின் நிலவு, அதன் முழு ஒளியுடன் ஜொலிக்கும்.பாதுகாப்பு கண்ணாடிகள் அணியாமல், வெறும் கண்களால் பார்க்கலாம்.
இன்று நடக்கும் சந்திர கிரஹணத்தை சென்னை, கோவை, திருச்சி, வேலுார் ஆகிய அறிவியல் தொழில்நுட்ப மையங்களில், பொதுமக்கள் பார்வையிட, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment